அமர்நாத் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் 30 ஆம் தொடங்கியது. இந்த யாத்திரை அடுத்த மாதம் 11 ஆம் தேதிவரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் நாளும் வந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் வரை இரண்டு நாள்களாக யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் வானிலை சரியானதையடுத்து யாத்திரை நேற்று தொடங்கியிருந்த நிலையில், அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பு காரணமாக கொட்டிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பக்தர்கள் முகாம்கள் பல அடித்துச்செல்லப்பட்டன.
மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.
இதில் சிக்கி தவித்த 15ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
40 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த 100க்கும் அதிகமான மீட்புப் படையினரை கொண்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.